விருதுநகர் மாவட்ட எஸ்.பி. கண்ணன் அவர்களின் உத்தரவின்பேரில், ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதன் அடிவார பகுதிகளில் கள்ளச்சாராயம் உற்பத்தி மற்றும் பிற சட்டவிரோத செயல்கள் நடைபெறுகிறதா என்பதை உறுதிப்படுத்தும் வகையில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
இந்த சோதனையை மதுவிலக்கு பிரிவு டிஎஸ்பி சண்முகசுந்தரம் தலைமையில், சேத்தூர் ஊரக காவல் நிலைய எஸ்ஐ முருகராஜ், தனிப்பிரிவு எஸ்ஐ முருகன் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட போலீசார் இணைந்து மேற்கொண்டனர்.
மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் உள்ள புல்பத்தி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் தீவிர சோதனை நடந்து வந்தது. சோதனையின் போது, அந்த பகுதிகளில் வசிக்கும் விவசாயிகள் மற்றும் ஆடு, மாடு மேய்ப்பவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

சட்டவிரோத நடவடிக்கைகள் நடைபெறுகிறதா என தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார், அத்தகைய செயல்கள் குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் வழங்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டனர். மேலும் அவசர தேவைக்காக போலீஸ் நிலைய தொலைபேசி எண்களும் வழங்கப்பட்டன.
தகவல் அளிக்கும் நபர்களின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்று போலீசார் உறுதியளித்தனர்.