கரூர் மாவட்டம், மணவாடி கிராமத்தில் 2020ஆம் ஆண்டு நிலமோசடி தொடர்பாக நடந்த இரட்டை கொலை வழக்கில் தொடர்புடைய மூன்றாவது பிரதிவாதி பிரவீன் (எ) வெங்கடேஷ் (வயது 29) நீண்ட காலமாக தலைமறைவாக இருந்து வந்தார்.
இந்த வழக்கில் ஏற்கனவே ராயனூர், தில்லை நகர் பகுதியைச் சேர்ந்த பார்த்தீபன் (31) மற்றும் கௌதம் (30) ஆகியோர் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற விசாரணையின் பின்னர் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தலைமறைவாக இருந்த பிரதிவாதி பிரவீன் (எ) வெங்கடேஷை கரூர் அமர்வு நீதிமன்றம் Proclaimed Offender (விளம்பரப்படுத்தப்பட்ட குற்றவாளி) என்று அறிவித்தது.
தலைமறைவாக இருந்த பிரதிவாதியின் கைது:
கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் K. பெரோஸ் கான் அப்துல்லா IPS அவர்கள் உத்தரவின் பேரில், உதவி ஆய்வாளர் அகிலன் தலைமையிலான ரவுடிகள் தடுப்பு பிரிவு (Anti Rowdy Team), 07.02.2025 அன்று திருச்சியில் தலைமறைவாக இருந்த பிரவீன் (எ) வெங்கடேஷை கைது செய்தது.

உதவி ஆய்வாளர் அகிலன்
இன்று (08.02.2025) கரூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் எண். 1 அவர்களுக்கு முன்னர் ஆஜர்படுத்தப்பட்ட இவருக்கு நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது. அதன்படி, அவர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
மேலும், தாந்தோணிமலை காவல் நிலையத்தில் அவருக்கு எதிராக முன்னதாகவே வழக்கு பதிவு செய்யப்பட்டு, நீதிமன்ற விசாரணை நடைபெற்று வருகிறது.
விரைவாக நடவடிக்கை எடுத்த காவல்துறைக்கு பாராட்டு:
தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியை கைது செய்த ரவுடிகள் தடுப்பு பிரிவு (Anti Rowdy Team) குழுவினரை கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் K. பெரோஸ் கான் அப்துல்லா IPS அவர்கள் பாராட்டியுள்ளார்.