தமிழ்நாடு சிலை திருட்டு தடுப்பு பிரிவினரால் கடந்த இரண்டு நாட்களில் சிறப்பு ரெய்டு நடத்தப்பட்டு, 3 வழக்குகளில் 11 பேர் கைது செய்யப்பட்டு, 6 சுவாமி சிலைகள், ஒரு திருவாச்சி ஆகியன மீட்கப்பட்டன.

காவல் ஆய்வாளர், சிலை திருட்டு தடுப்பு பிரிவு, திருநெல்வேலி சரகம், 19.03.2024 அன்று தனக்கு கிடைத்த தகவலின் பேரில் மதுரை மாவட்டம், விளாங்குடி செம்பருத்தி நகரில் உள்ள பிலோமின்ராஜ் என்பவரது வீட்டை தனது காவல் குழுவினருடன் தணிக்கை செய்தார். தணிக்கையில் ஒரு விநாயகர் சிலை கைப்பற்றப்பட்டது. முதல் கட்ட விசாரணையில் இச்சிலையானது விளாங்குடி விசாலாட்சி மில் வளாகத்தில் உள்ள விநாயகர் கோயிலில் திருடப்பட்டது என தெரிய வந்துள்ளது. இவ்வழக்கில் எதிரிகள் (1) பிலோமின்ராஜ் (2) ஜோசப்கென்னடி (3) டேவிட் மற்றும் (4) அன்புராஜன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கு தொடர்பாக சென்னை சிலை திருட்டு தடுப்பு பிரிவு காவல் நிலைய குற்றஎண்.2/2024 ச/பி. 454(2), 380(2), 414. இ.த.ச படி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

காவல் ஆய்வாளர், சிலை திருட்டு தடுப்பு பிரிவு, திண்டுக்கல் சரகம் 19.03.2024 அன்று புதுக்கோட்டை ஆலத்தூர் சந்திப்பில் தனது காவல் குழுவினருடன் வாகன தணிக்கை மேற்கொண்டார். அப்போது அங்கு (TN 55BW 1121) என்ற எண்ணுள்ள ( பஜாஜ் பல்சர் ) இருசக்கர வாகனத்தை சோதனை செய்ததில் பழமையான அம்மன் சிலை ஒன்று இருந்ததைக் கண்டு அச்சிலை மீட்கப்பட்டது. மேலும் எதிரிகள், (1) அஜித் – காரைக்குடி (2) ஶ்ரீராம் – கோவில்பட்டி மற்றும் (3) அகமது – விருதுநகர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக சென்னை சிலை திருட்டு தடுப்பு பிரிவு காவல் நிலைய குற்ற எண்.3/2024 ச/பி. 41(1)(டி), 102, 454(2), 457(2), 380(2), இ.த.ச படி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதேபோல் காவல் உதவி ஆய்வாளர், விழுப்புரம் சரகம் மற்றும் தனிப்படையினர் 20.03.2024 அன்று விழுப்புரம் மாவட்டத்தில், புலிச்சப்பள்ளம் என்ற இடத்தில் செல்வகுமார் என்பவர் வீட்டில் சோதனை நடத்தினர். அங்கிருந்து மூன்று பெருமாள் உலோகச் சிலைகள், ஒரு அனுமன் சிலை (ராமர் மற்றும் லட்சுமணரை தோளில் ஏந்திய சிலை) மற்றும் ஒரு திருவாச்சியை கைப்பற்றினர். எதிரிகள் (1) பாரதிதாசன் (2) நிசார் (3) அகஸ்டின் மற்றும் (4) முத்து ராதாகிருஷ்ணன் ஆகியோரை கைது செய்தனர். இது தொடர்பாக சென்னை சிலை திருட்டு தடுப்பு பிரிவு காவல் நிலைய குற்ற எண்.4/2024 ச/பி. 457(2), 380(2), 411, 414 இ.த.ச. படி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேற்கண்ட வழக்குகள் சம்மந்தமாக மேல் விசாரணை நடைபெற்று வருகிறது.