சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ. அருண், இ.கா.ப. அவர்களின் உத்தரவின் பேரில், சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் 23.03.2025 முதல் நடைபெறும் IPL கிரிக்கெட் போட்டிகளில் பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் “சென்னை சிங்கம் IPL QR குறியீடு” எனும் செயற்கை நுண்ணறிவு (AI) வசதி அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த QR குறியீடு வழியாக, போட்டி காண வந்தவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளை நேரடியாக காவல்துறைக்கு தெரிவிக்க முடியும். இந்த புதிய முறைமை குறித்த அறிவிப்புகள் மைதானம் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் வைக்கப்பட்டிருந்தன.

அதே நாளில், செல்போன்கள் திருடுபோனதாக பொதுமக்கள் சிலர் இந்த QR குறியீடு வழியாக புகார் அளித்தனர். அதன் பேரில் D-1 திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, காவல் ஆய்வாளர் பிரகாஷ் தலைமையிலான குழு விசாரணையை மேற்கொண்டது.

இந்த குழுவில் உதவி ஆய்வாளர்கள் கணேஷ்பாபு, பால்ராஜ், வினோத்குமார், தலைமைக் காவலர்கள் சிவகுமார் (31833), மணிமுத்து (31348), ரதீஷ்குமார் (38006), பெண் தலைமைக் காவலர் ஷீஜாராணி (பெ.த.கா.37268), முதல்நிலை காவலர் சுரேஷ்குமார் (50903), காவலர்கள் ராஜபாண்டி (61505), லோகேஷ் (50268), வினோத்குமார் (61397) மற்றும் சைபர் கிரைம் பிரிவு உதவி ஆய்வாளர் விமல்குமார் ஆகியோர் இணைந்து துரித விசாரணை நடத்தினர்.

விசாரணை முடிவில், ஜார்கண்ட் மாநிலம் தின்பஹார் பகுதியைச் சேர்ந்த 10 நபர்கள் கைது செய்யப்பட்டு, 1 இளஞ்சிறாரும் விசாரணைக்காக அழைக்கப்பட்டார். அவர்களிடம் இருந்து திருடப்பட்ட 74 செல்போன்கள் மீட்கப்பட்டன.

இந்த அதிவேக நடவடிக்கையின் மூலம் “சென்னை சிங்கம் IPL QR குறியீடு” திட்டத்தின் பயன்தன்மையும், செயல் திறனும் உறுதிப்பட்டது.

இதற்காக, இந்த சிறப்பான பணியை மேற்கொண்ட காவல் குழுவினரை, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ. அருண் 15.04.2025 இன்று நேரில் அழைத்து பாராட்டி, வெகுமதி வழங்கி கௌரவித்தார்.

பாராட்டு விழாவில் கூடுதல் காவல் ஆணையாளர் (தலைமையிடம்) விஜயேந்திர பிதாரி, துணை ஆணையாளர்கள் D.N. ஹரிகிரண் பிரசாத் (தலைமையிடம்), G. சுப்புலட்சுமி (நிர்வாகம்) மற்றும் பல்வேறு அதிகாரிகள், ஆளிநர்கள் பங்கேற்றனர்.