கன்னியாகுமரி மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளர் டாக்டர் R. ஸ்டாலின் IPS அவர்களின் முனைப்பில், மாவட்டத்திலுள்ள அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமங்களில் ஊர்க்காவல் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம், கிராமங்களைச் சேர்ந்த நியமிக்கப்பட்ட காவலர்கள் குற்ற சம்பவங்கள் குறித்த தகவல்களை பொதுமக்களிடமிருந்து பெறுவதற்கான ஒரு சக்திவாய்ந்த பாலமாக செயல்படுகின்றனர்.
இந்நிலையில், ஆரல்வாய்மொழி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வீரநாராயண மங்கலம் பகுதியில் இரவு நேரங்களில் ஆடு மற்றும் மாடுகள் திருடப்படுவது குறித்து பொதுமக்கள் ஊர்க்காவல் காவலரிடம் தகவல் வழங்கினர்.
அந்த தகவலின் அடிப்படையில், ஆட்டினை இழந்த நபர் அளித்த புகாரின் பேரில் ஆரல்வாய்மொழி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதன் பின்னர், ஆரல்வாய்மொழி போலீசார் மேற்கொண்ட விரைவான நடவடிக்கையில், அனந்த பத்மநாபபுரம் பகுதியைச் சேர்ந்த கணேசனின் மகன் பிரகாஷ் (வயது 29) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து ஆறு ஆடுகள் பறிமுதல் செய்யப்பட்டது. பிறகு அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
🟡 மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் இந்த திட்டம் குற்றங்களை தடுக்கும் நோக்கில் வெற்றிகரமாக நடைமுறையில் உள்ளது. இந்த முயற்சி மேலும் பலனளிக்க, அனைத்து பொதுமக்களும் தொடர்ந்து ஒத்துழைக்குமாறு மாவட்ட காவல்துறை சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.