சென்னை, மே 27, 2025 – போதைப் பொருட்கள் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, அம்பத்தூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் இன்று காலை நடத்திய அதிரடிப் பணியில் 10 கிலோ கஞ்சா மற்றும் 24 கிராம் ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

“போதையில்லா தமிழ்நாடு” என்ற அரசு கோட்பாட்டை முன்னிறுத்தி காவல் ஆணையாளர் உத்தரவின் பேரில், போலீசார் இன்று மேனாம்பேடு பிள்ளையார் கோயில் தெரு சந்திப்பில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்த நேரத்தில் சந்தேகத்திற்கிடமான வகையில் நடந்து வந்த நபர் ஒருவரை நிறுத்தி சோதனையிட்டபோது, அவரிடமிருந்து மேற்படி போதைப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

பின்னர் அந்த நபர் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டார். விசாரணையில் அவர் முகமது தாகிதுல் (வயது 30), மேற்கு வங்காளம் மாநிலம் கொல்கத்தா மாவட்டத்தை சேர்ந்தவர் எனவும், அவர் கொல்கத்தா சாலிமா ரயில்நிலையம் அருகிலுள்ள பெயர், முகவரி தெரியாத ஒருவரிடம் இருந்து போதைப் பொருட்களை வாங்கி, பட்டரவாக்கம், கொரட்டூர் மற்றும் அம்பத்தூர் எஸ்டேட் பகுதிகளில் விற்பனை செய்ய வந்தது தெரியவந்தது.

இச்சம்பவம் தொடர்பாக அவர்மீது சம்பந்தப்பட்ட பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.