சென்னை நகரத்தில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாகவும், போக்குவரத்திற்கு இடையூறாகவும் வாகனங்களை அதிவேகமாகவும் அதிக ஒலியுடன் ஓட்டிய 10 நபர்கள் சென்னை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 9 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ. அருண், இ.கா.ப., அவர்களின் நேரடி கண்காணிப்பில், சட்ட விரோத பைக் ரேசிங் மற்றும் ஆபத்தான வாகன ஓட்டத்திற்கு எதிராக நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகின்றன.
2025 மே 24ஆம் தேதி இரவு, அண்ணா நகர் புளுஸ்டார் பகுதியில் இருந்து அண்ணா நகர் ரவுண்டானை நோக்கி சில வாகன ஓட்டிகள் அதிவேகமாக, கட்டுப்பாடின்றி சாலையில் பயங்கரவாதமாக பைக் ஓட்டியதாக தகவல் கிடைத்தது. உடனடியாக காவல் துறை விசைப்படைகள் தடுப்பு நடவடிக்கைகளை ஏற்படுத்தி, கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டன.
பின், சமூக வலைதளங்களில் இந்த சம்பவம் தொடர்பான வீடியோக்கள் பரவத் தொடங்கியதை அடுத்து, K-4 அண்ணா நகர் காவல் நிலைய போக்குவரத்து புலனாய்வு பிரிவில் மூன்று பிரிவுகளாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
நவீன தொழில்நுட்பங்களை கொண்டு கண்காணிப்பு கேமரா பதிவுகள் மூலம் விசாரணை நடத்தப்பட்டதில், பைக் ரேசிங்கில் ஈடுபட்டவர்கள் அடையாளம் காணப்பட்டு 10 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் பயன்படுத்திய 9 இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணைக்கு பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, சாலையில் அதிவேகமாகவும், அதிர்ச்சியூட்டும் முறையில் வாகனம் ஓட்டும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.