இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக G. சந்தீஷ், இ.கா.ப., அவர்கள் பொறுப்பேற்றதையடுத்து, மாவட்டத்தில் பொதுமக்களுடன் நேரடியாக சந்தித்து, அவர்களின் சட்டம் ஒழுங்கு குறைபாடுகள் மற்றும் தேவைகளை கேட்டறிந்து, உடனடி நடவடிக்கைகள் எடுக்க “உங்கள் ஊரில் உங்கள் SP” என்ற புதிய மக்கள் நல திட்டத்தை துவக்கியுள்ளார்.
இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, நேற்று (12.06.2025) கீழக்கரை உட்கோட்டம், சாயல்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கடுகுசந்தை சத்திரம் கிராமத்தை அவர் நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது கிராம மக்களிடம் பேசிய அவர், ஊருக்குள் பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில் CCTV கேமராக்களின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
மேலும், கிராம இளைஞர்களிடம் வேலைவாய்ப்பு வாய்ப்புகள் மற்றும் கல்லூரி மேற்படிப்புகளுக்கான உதவிகள் வழங்கப்படும் என்றும் உறுதியளித்தார். சமூகவலைதளங்களில் வாள் போன்ற ஆயுதங்களுடன் புகைப்படங்களை வெளியிடுவதை இளைஞர்கள் தவிர்க்க வேண்டும் என அவர் அறிவுறுத்தினார்.


சமூக ஒருமைப்பாட்டை வலுப்படுத்தும் நோக்கில், SP அவர்கள் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி மகிழ்ந்ததோடு, SSLC மற்றும் HSC தேர்வுகளில் சிறப்பாக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பணவெகுமதி அளித்து பாராட்டு தெரிவித்தார்.
இந்த “உங்கள் ஊரில் உங்கள் SP” திட்டத்தின் கீழ், மாவட்டத்தின் அனைத்து முக்கிய கிராமங்களுக்கும் நேரில் சென்று பொதுமக்களின் குறைகளை கேட்டறியும் திட்டம் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G. சந்தீஷ், இ.கா.ப., அவர்கள் தெரிவித்தார்.