கோவை மாவட்டத்தில் ட்ரோன் பயிற்சியை வெற்றிகரமாக முடித்த காவலர்களுக்கு ட்ரோன் பைலட் உரிமம் வழங்கப்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் K. கார்த்திகேயன், இ.கா.ப., அவர்களால் பாராட்டப்பட்டது.
கோவையைச் சேர்ந்த ஸ்ரீ ஈஸ்வர் ட்ரோன் டெக் நிறுவனம், விமான போக்குவரத்து துறையால் அங்கீகரிக்கப்பட்டதாகும். இந்நிறுவனம் ட்ரோன் பைலட் உரிமம் பெறுவதற்கான பயிற்சியை வழங்கி வருகிறது. 5 நாள் பயிற்சியில், செயல்முறை விளக்கத்துடன் நான்கரை மணி நேரம் ட்ரோன் இயக்கும் சுய பயிற்சியும் இடம்பெறுகிறது. பயிற்சி முடித்தவர்களுக்கு விமான போக்குவரத்து துறையின் அங்கீகாரத்துடன் 10 வருடங்களுக்கு செல்லுபடியாகும் ட்ரோன் பைலட் உரிமம் வழங்கப்படுகிறது.
இந்த பயிற்சியில், கோவை மாவட்ட காவல்துறையைச் சேர்ந்த பரமேஸ்வரன், திவாகர், சந்தோஷ் குமார், சக்திவேல், திருமால் ஆகியோர் பங்கேற்றனர். பயிற்சியின் ஒரு பகுதியாக, காவல்துறை ட்ரோன் செயல்பாடுகளில் மேற்கொள்ள வேண்டிய சிறப்பு நடவடிக்கைகள் குறித்தும் பயிற்சி வழங்கப்பட்டது.
நிகழ்வில் ஸ்ரீ ஈஸ்வர் ட்ரோன் டெக் நிறுவனத்தின் சார்பாக அக்கவுண்டபிள் மேனேஜர் லெப்டினென்ட் மெஹபூப், தலைமை பயிற்சியாளர் வேணுகோபால் மற்றும் பயிற்சியாளர் முனைவர் சம்பத்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.