சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ. அருண், இ.கா.ப., அவர்கள், கொலை முயற்சி வழக்கில் சிறப்பாக புலனாய்வு செய்து குற்றவாளிகளுக்கு கடுங்காவல் தண்டனை பெற்றுத் தந்த காவல் ஆய்வாளர் K. சீனிவாசனை நேரில் அழைத்து பாராட்டி, வெகுமதி வழங்கியுள்ளார்.

வழக்கின் பின்னணி:
சென்னை, வியாசர்பாடி, B. கல்யாணபுரம் பகுதியில் வசிக்கும் சதீஷ் (வயது 23) என்பவரை 08.10.2020 அன்று இருவர் கத்தியால் தாக்கி கொலை செய்ய முயன்றனர். இதனையடுத்து, P-3 வியாசர்பாடி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, அப்போதைய காவல் ஆய்வாளர். K. சீனிவாசன் (தற்போது R-10 எம்.ஜி.ஆர். நகர் காவல் நிலைய ஆய்வாளர்) தலைமையிலான போலீஸ் குழு தீவிர விசாரணை மேற்கொண்டது.

விசாரணையின் அடிப்படையில், விக்கி (வயது 31) மற்றும் ஜெகதீஸ்வரன் (வயது 23) ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். தொடர்ந்து காவல் ஆய்வாளர் மற்றும் போலீஸ் குழுவினர் நீதிமன்றத்தில் சாட்சிகளை முறையாக ஆஜர்படுத்தி, வழக்கின் விசாரணையை உறுதியாக முன்னெடுத்தனர்.

நீதிமன்ற தீர்ப்பு:
வழக்கு விசாரணை முடிவடைந்து, 26.02.2025 அன்று சென்னை சிங்காரவேலர் மாளிகை வளாகத்தில் உள்ள 16வது கூடுதல் அமர்வு நீதிமன்றம் தனது இறுதி தீர்ப்பை வழங்கியது. குற்றம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து, இருவருக்கும் தலா 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை மற்றும் ரூ.5000/- அபராதம் விதிக்கப்பட்டது. அபராதம் செலுத்தத் தவறினால் மேலும் 6 மாதங்கள் சிறை அனுபவிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

காவல் ஆய்வாளருக்கு பாராட்டு:
இந்த வழக்கில் சிறப்பாக புலனாய்வு செய்து, நீதிமன்றத்தில் உறுதிப்படுத்திய ஆவணங்கள், சாட்சிகள் மற்றும் இறுதி அறிக்கையால் குற்றவாளிகளுக்கு கடுங்காவல் தண்டனை பெற்றுத்தந்த காவல் ஆய்வாளர் K. சீனிவாசனை, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ. அருண், இ.கா.ப., நேரில் அழைத்து பாராட்டி, வெகுமதி வழங்கினார்.

இந்த பாராட்டும் வெகுமதியும், காவல் துறையின் சிறப்பான பணி மற்றும் நீதிக்கான உறுதிப்பாட்டிற்கு ஓர் உதாரணமாகும்!