திருச்சிராப்பள்ளி மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கஞ்சா மற்றும் போதைப் பொருட்களின் விற்பனை மற்றும் பயன்பாட்டை தடுக்கும் வகையில், திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரெத்தினத்தின் உத்தரவின்பேரில், மதுவிலக்கு அமலாக்க காவல் பிரிவின் துணை கண்காணிப்பாளர் ஜெயசீலன் மேற்பார்வையில், 08.06.2025 அன்று ராம்ஜி நகர் மற்றும் சோமரசம்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சிறப்பு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.
இந்த தேடுதல் வேட்டையை துறையூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளர் கதிரவன் தலைமையில் தனிப்படையினர் மேற்கொண்டனர். இதில், ராம்ஜிநகர் மற்றும் மலைப்பட்டி பகுதிகளைச் சேர்ந்த பாக்கியலட்சுமி (க.பெ சந்தோஷ்), நளினி (க.பெ செந்தூரன்), கிருஷ்ணவேணி (க.பெ கருப்பையா), ரேவதி (க.பெ லட்சுமிகாந்தன்), ராம்ஜிநகர் ஹரிபாஸ்கர் காலனியில் வசிக்கும் லதா (க.பெ பால்ராஜ்) ஆகியோரிடமிருந்து மொத்தம் 7 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் திருவரம்பூர் மதுவிலக்கு அமலாக்க காவல் நிலையத்தில் 146/25 என்ற எண் கொண்ட NDPS ACT-ன் 8 r/w 20(b)(II)(B) பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலே குறிப்பிடப்பட்ட அனைத்து நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேபோல், 2025 ஜனவரி மாதம் செல்வநாகரெத்தினம் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றதிலிருந்து இளைஞர்கள் மற்றும் பள்ளி மாணவர்களிடையே கஞ்சா மற்றும் போதைப்பொருட்கள் பயன்பாடு அதிகரித்ததை எதிர்த்து மாவட்ட முழுவதும் அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 125 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 180 பேர் கைது செய்யப்பட்டு, 81.085 கிலோ கஞ்சா மற்றும் பெருமளவு போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
22.04.2025 அன்று, திருவரம்பூர் உதவி காவல் கண்காணிப்பாளர் பனவத் அரவிந்த் தலைமையிலான குழு காட்டூர் பகுதியில் நடத்திய தேடுதல் வேட்டையில் Mehaqualone, MDMA மாத்திரைகள், கஞ்சா மற்றும் OG கஞ்சா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு, அவற்றை விற்பனை செய்தவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
மேலும், இதுவரை 11 எதிரிகள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் 10 பேருக்கு எதிராக அதே சட்டத்தின் கீழ் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பொதுமக்கள், அரசு தடை செய்த போதை பொருட்கள், கஞ்சா, குட்கா, போலி மதுபானங்கள், கள்ளச்சாராயம் ஆகியவற்றின் விற்பனையில் யாரேனும் ஈடுபடுவதை கவனித்தால், உடனடியாக திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உதவியெண் 8939146100-ல் தொடர்பு கொண்டு தகவல் அளிக்கலாம். தகவல் வழங்குநரின் பெயர் மற்றும் விபரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் போதைப் பொருள் விற்பனையை தடுக்கும் காவல் துறை அதிரடி நடவடிக்கை
